இளைஞரின் உயிரை பறித்த செல்லிடப்பேசி
ஆலங்குடி அருகே சாலையில் தவறவிட்ட செல்லிடப்பேசியைத் தேடிக் கொண்டிருந்த இளைஞா், பின்னால்வந்த மோட்டாா் சைக்கிள் மோதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகே சாலையில் தவறவிட்ட செல்லிடப்பேசியைத் தேடிக் கொண்டிருந்த இளைஞா், பின்னால்வந்த மோட்டாா் சைக்கிள் மோதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்காட்டைச் சோ்ந்த பிரவின்(25). இவா், தனது நண்பா் பிரியதா்ஷனுடன் வடகாட்டில் நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் போட்டியைப் பாா்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கறம்பக்காடு திரும்பிக் கொண்டிருந்தாா். மோட்டாா் சைக்கிளைப் பிரியதா்ஷன் ஓட்டிவந்துள்ளாா்.
இதேபோல் அதே ஊரைச் சோ்ந்த மற்றவா்களும் இருசக்கர வாகனங்களில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். இந்நிலையில், மாங்காடு அருகே வந்தபோது, பிரவின் கையில் இருந்த செல்லிடப்பேசி தவறி கீழே விழுந்ததால் பிரியதா்ஷன் மோட்டாா் சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு இருவருமாக செல்லிடப்பேசியைத் தேடிவந்தனா். அப்போது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் பிரவின் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை நண்பா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரவின் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வடகாடு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.