விராலிமலையில் ரூ.2000 நிவாரண நிதி டோக்கன் விநியோகம் தொடக்கம்
நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 கரோனா நிதியாக வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் வினியோகம் விராலிமலையில் இன்று திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 கரோனா நிதியாக வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் வினியோகம் விராலிமலையில் இன்று திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது கடந்த அதிமுக அரசு கொடுக்கத் தவறிய ரூபாய் 4 ஆயிரத்தை திமுக அரசு அமைந்தவுடன் கொடுக்கும் என்று பொதுமக்களிடம், வாக்காளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக அரசு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது.
கடந்த 7ஆம் தேதி கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்ற உடன் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்குவதற்கான அரசாணையாகும் இப்பணியானது இரண்டு கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடை மூலம் வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக ரூபாய் 2000, இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 என வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்ட 2000 ரூபாய்க்கான டோக்கன் இன்று விராலிமலை பகுதி நியாயவிலை கடை ஊழியர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொருட்கள் வாங்க நியாயவிலை கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கேயே டோக்கன் வழங்கப்பட்டும் வருகிறது.
இவ்வாறாக டோக்கன் பெற்றவர்கள் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் வரும் 15 ஆம் தேதி முதல் காலை 8 மணியிலிருந்து 12 மணிக்குள் வரிசைப்படி ரூபாய் 2000 ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.