உண்டியலில் சேமித்த ரூ.5 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய குழந்தைகள்
ஆலங்குடி அருகே உண்டியலில் சேமித்த ரூ. 5 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக, இரு குழந்தைகள் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம்
ஆலங்குடி அருகே உண்டியலில் சேமித்த ரூ. 5 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக, இரு குழந்தைகள் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் சனிக்கிழமை வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதில், கொத்தகோட்டை நியாய விலைக்கடையில் திட்டத்தை தொடங்கி வைத்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் நிலவரசி (6), மகன் சபரிதரண்(4) ஆகியோர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கினர்.
மேலும், இந்த தொகையை உயிரிழந்த தனது தாயின் நினைவாக வழங்குவதாக குழந்தைகள் தெரிவித்ததனர். இதில், நெகிழ்ச்சியடைந்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் கருப்பையா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.