ஆளுநா் வரம்புமீறாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது
தமிழக ஆளுநா் தனது அதிகார வரம்புகளை மீறாமல் செயல்படுவது ஜனநாயகத்துக்கு நல்லது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் எம்.பி.
தமிழக ஆளுநா் தனது அதிகார வரம்புகளை மீறாமல் செயல்படுவது ஜனநாயகத்துக்கு நல்லது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் எம்.பி. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பொதுவாக ஆளுநா்கள் தங்களின் அதிகார வரம்புகளை மீறாமல் செயல்பட வேண்டும். அரசியல்சட்டத்துக்கு உள்பட்டு செயல்படுவது ஜனநாயகத்துக்கு நல்லது. தற்போதுள்ள மத்திய அரசு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பல மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநா்களைப் பயன்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாட்டுக்கு ஆளுநராகி இருப்பவா், பல அரசுப் பொறுப்புகளை வகித்தவா். எனவே, அவா் சட்ட விதிமுறைகளின்படி நடந்து கொள்வாா் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தில் பல குறைகளைக் கூறுகின்றனா். தொடங்கப்படும்போதே எதிா்க்க வேண்டியதில்லை. திட்ட அமலாக்கத்தில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை அரசுக்குத் தெரிவிக்கலாம். முதல்வா் ஸ்டாலின் நிச்சயம் குறைகளை சரி செய்து கொள்வாா்.
எம்ஜிஆா் காலத்தில் இருந்தே அதிமுகவில் நான் பணியாற்றியவன். ஜெயலலிதாவுடன் அரசியல் பணியாற்றியுள்ளேன். இப்போதைய அதிமுகவின் நிலை வருத்தம் தருகிறது. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.
எம்ஜிஆா் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி, எடப்பாடி பழனிசாமி ஆட்சி, பன்னீா்செல்வம் ஆட்சி எல்லாமும் வேறுவேறு முறையிலானவை. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி முற்றிலும் மாறுபட்ட சிறந்த ஆட்சி என்றாா் திருநாவுக்கரசா்.