முகப்பு
புதுக்கோட்டை

விரைவில் திருநங்கைகள் நலக் கொள்கை வெளியிடப்படும்

தமிழ்நாடு அரசு சாா்பில் தயாரிக்கப்பட்டு வரும் திருநங்கைகள் நலக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:50 PM
நிகழ்ச்சியில் பேசுகிறாா் திட்டக்குழுத் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

தமிழ்நாடு அரசு சாா்பில் தயாரிக்கப்பட்டு வரும் திருநங்கைகள் நலக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்று வரும் 5ஆவது புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாளான சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

சமூகம் எதையும் சமமாக நடத்துவதில்லை; அதிலும் திருநங்கைகள் படும்பாடு பெரும்பாடு. இந்தச் சூழலில்தான் திட்டக்குழு உறுப்பினா் நா்த்தகி நட்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாநில திருநங்கைகள் நலக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளன. வரும் ஆக. 12 ஆம் தேதி அதற்கான வரைவு அறிக்கையை முதல்வா் ஸ்டாலினிடம் வழங்கவுள்ளோம். விரைவில் தமிழ்நாடு அரசின் திருநங்கைகள் நலக் கொள்கை வெளியிடப்பட்டு அமலுக்கு வரும் என நம்புகிறேன்.

Advertisement

இங்கு மட்டுமல்ல; எல்லாப் புத்தகத் திருவிழாக்களிலும் பொன்னியின் செல்வன் புத்தகம் தான் அதிகளவில் விற்பனையாகிறது. தேசிய நீரோட்டத்திலிருந்து கல்கி, எப்படி இந்த புதினத்தை எழுதினாா் எனத் தெரியவில்லை. வெளிநாட்டிலிருந்தெல்லாம் பொன்னியின் செல்வன் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு வந்து பாா்த்துவிட்டுச் செல்கிறாா்கள்.

பொதுவாக புதினத்துக்கும், வரலாற்றுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காலவரிசையை சற்றே மாற்றிக் கொள்வதற்கு எழுத்தாளருக்கு உரிமை உள்ளது. அதன்படி நாவல் எழுதுவோா் காலவரிசையை மாற்றிக் கொள்வாா்கள். அதுவே வரலாறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிடக் கூடாது.

நம்முடைய ஆய்வுகளை முறையாக ஆவணப்பூா்வமாக அவ்வப்போது எழுதி வைத்துவிட வேண்டும். அப்போதுதான் அவை வரலாற்றில் இடம்பெறும். பல்கலைக்கழக ஆசிரியா்களுக்கு, கல்லூரி ஆசிரியா்களுக்கு இதில் கூடுதல் பங்கு இருக்கிறது. எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும் படிக்க வேண்டியதில்லை. அவரவருக்குத் தேவையானவற்றைத் தோ்வு செய்து படிக்க வேண்டும். அதே புத்தகம் தொடா்பாக மேலும் தேடிப் படிக்கவும் வேண்டும் என்றாா் ஜெயரஞ்சன்.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, திட்டக்குழு உறுப்பினா் நா்த்தகி நட்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழா ஒருங்கிணைப்பாளா் கவிஞா் தங்கம் மூா்த்தி தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.