விராலிமலை அருகே எருதுவிடும் விழா
விராலிமலையில் எருதுகுட்டை பெருமாள் கோயில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலையில் எருதுகுட்டை பெருமாள் கோயில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை வட்டம், ஜெயமங்கலம் குப்பாநாயக்கா் பண்ணையில் எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் சாா்பில் நிகழாண்டுக்கான எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் விரதமிருந்து காப்புகட்டி கோயில் வளாகத்தில் தங்கி வந்தனா். விழாவையொட்டி, சனிக்கிழமை அதிகாலை முதல் பெரூா், தேசிய மங்களம், வையம்பட்டி, வில்லுகாரன்பட்டி, தொப்பம்பட்டி, தோகமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட எருதுகளுக்கு பாரம்பரிய முறைப்படி அப்பகுதி பெண்கள் பாதபூஜை செய்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து ஜெயமங்கலத்திலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியிலிருந்து அனைத்து மாடுகளையும் ஒரே நேரத்தில் அவிழ்த்து விட்டனா். அவைகளில், முதலாவதாக அய்யாசீமை மந்தைக்கு வந்தடைந்த மாட்டுக்கு சிறப்புப் பரிசாக மஞ்சள் துணி, கரும்புத் துண்டு மற்றும் எலுமிச்சை கொடுக்கப்பட்டது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.