அகவிலைப் படியை நிலுவையின்றி வழங்க ஓய்வூதியா்கள் கோரிக்கை
அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது
அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கேரள, ஆந்திர அரசுகளைப் போல அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்கும் செலவுத் தொகையை மீளப் பெரும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ. ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவிகிதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப் படியை ரூ. ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் கணேசன் வரவேற்றாா். திருச்சி மாவட்டச் செயலா் பா. கிருஷ்ணன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மு. முத்தையா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். மாநிலப் பொதுச் செயலா் எஸ். பிரபாகரன் சிறப்புரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் நா. கிருஷ்ணன் நன்றி கூறினாா்.