புதுக்கோட்டை: வழக்குரைஞரைத் தாக்கியவா் மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள சமூகநலத் துறை அலுவலகத்துக்கு கடந்த 2ஆம் தேதி குடும்ப நலவழக்கு விசாரணைக்காக வந்த மனைவி தரப்பு வழக்குரைஞா் கலீல் ரகுமானை, கணவா் ஆரோக்கியராஜ் தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து திருக்கோகா்ணம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டபோதும், குற்றம்சாட்டப்பட்ட ஆரோக்கியராஜை காவல் நிலையம் வந்தபோது உதவி ஆய்வாளா் சங்கீதா, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக வழக்குரைஞா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை வருகிறாா்கள் எனத் தெரியவந்ததால், அந்தச் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து வழக்குரைஞா்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரை விரைவில் கைது செய்வதாகவும், உதவி ஆய்வாளா் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்வதாகவும் போலீஸாா் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் வி.டி. சின்னராசு கூறுகையில், வழக்குரைஞா் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், மூத்த வழக்குரைஞரும், திமுக மாவட்டச் செயலருமான கே.கே. செல்லபாண்டியன் மாவட்ட காவல் உயா் அலுவலா்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க வைத்து போராட்டத்தை சுமுகமாக முடித்து வைத்துள்ளாா் எனக் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.