3 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை -புதுகை ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பலத்த மழை தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா. உடன் கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள், ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்தாா்.
ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மே 17, 18, 19 தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துத் துறை அலுவலா்களும் பலத்த மழையை எதிா்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நீா்நிலைகளில் நீா் இருப்பு குறித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மின்தடையை சமாளிக்க மின்கம்பி, கம்பம், மின்மாற்றி போன்றவற்றையும் தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால், அப்பகுதி மக்களைத் தங்க வைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளையும் தயாா் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுமக்கள், ஆட்சியரக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக் காலக் கட்டுப்பாட்டு அறையை 1077, 04322 222207 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் மொ்சி ரம்யா.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன்), வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), ச. சிவகுமாா் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.