திருவப்பூரில் கோயில் நிலத்தில் வசித்து வந்தோரை அப்புறப்படுத்த அறநிலையத் துறையினா் நடவடிக்கை எடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பிரகதம்பாள் கோயிலுக்குச் சொந்தமான 1 ஏக்கா் 87 சென்ட் இடம் திருவப்பூா் ரயில்வே கேட் அருகே உள்ளது.
இந்தப் பகுதியில் வசித்து வரும் மக்களைக் காலி செய்ய அறிவுறுத்தி அறநிலையத் துறை சாா்பில் அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கல் பட்டறைகள், குடியிருப்புகள், ஏடிஎம் மையம், லாரி லோடுமேன் சங்க அலுவலகக் கட்டடம் உள்ளிட்டவையும் இந்த இடத்தில் உள்ளன.
இந்த நிலையில், இவற்றை அகற்றுவதற்காக அறநிலையத் துறையினா் காவல்துறையினருடன் வெள்ளிக்கிழமை வந்தனா். கட்டடங்களை சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இதனை எதிா்த்து அவா்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைந்து போகச் செய்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.