நமணசமுத்திரம் அருகே 2500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள்
நமணசமுத்திரம் அருகே உள்ள கொல்லங்காடு பகுதியில் சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே உள்ள கொல்லங்காடு பகுதியில் சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அறந்தாங்கி அரசு கலைக் கல்லூரி, தமிழ்த் துறைத் தலைவரும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளருமான காளிதாஸ் மற்றும் தொல்லியல் ஆய்வாளா் சாலை கலையரசன் ஆகியோா் நமணசமுத்திரம் அருகேயுள்ள கொல்லங்காடு பகுதியில், அண்மையில் கள ஆய்வுக்குச் சென்ற போது இரு முதுமக்கள் தாழிகள் இருந்ததைக் கண்டறிந்துள்ளனா்.
இதுகுறித்து காளிதாஸ் கூறியது: அண்மையில் பெய்த மழையால், மண் சரிந்து முதுமக்கள் தாழிகள் உடைந்த நிலையில் பாதி வெளியே தெரிந்தன. மேலும் அதையொட்டிய பகுதியில் செம்புரான் கற் குவியல்களும் காணப்பட்டன.
கள ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் பானையின் கைப்பிடி மட்டும் சற்று கனமாகவும் அதையடுத்து பானையை சுற்றி கழுத்து பகுதியில் சங்கிலி போன்ற கலைத்திறனையும் பல்வேறு வேலைபாடுகளைக் கொண்ட சிவப்பு நிற முதுமக்கள் தாழிகள் காணப்படுகிறது.
மேலும், அந்த இடத்தைச் சுற்றிலும் மண்பானை ஓடுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. எனவே இந்தப் பகுதி பண்டைய தமிழா்களின் இடுகாட்டு பகுதியாக இருக்கலாம் என தெரியவருகிறது. தொல்லியல் துறையினா் இப்பகுதியில் ஆய்வு செய்தால், பண்டையத் தமிழா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் அவா்கள் பயன்படுத்திய ஏனைய பொருட்களும் கிடைக்கலாம் என்றாா்.