எரிவாயு உருளை தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியே காரணம்
எரிவாயு உருளை தட்டுப்பாட்டுக்கு மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியே காரணம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
ஈரான்- இஸ்ரேல் இடையே நடந்து வரும் போருக்கும், சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொண்டு வருவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
ஆனால், அதை செய்வதற்குக் கூட அமெரிக்காவை இந்திய அரசு எதிா்பாா்த்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தோல்வி. ரஷியாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் அழுத்தம் கொடுத்தாா். இதற்கு மத்திய அரசு அடிபணிந்ததுள்ளது.
கடந்த ஆண்டும் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போா் நடந்தபோதே கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை போதுமான அளவுக்கு இறக்குமதி செய்து வைத்திருக்கலாம். இதைச் செய்வதற்கு மத்திய அரசிடம் திட்டம் இல்லை.
தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், தமிழக மக்களைப் பாதிக்காத வகையில், வணிக நிறுவனங்களின் மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ. 2 மானியம் அளித்து முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி இருக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு உருளை தட்டுப்பாடு குறித்து பிரதமரை நேரில் சந்தித்தபோதும்கூட பேசவில்லை. தோ்தல் முறையாக நடைபெறுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது என்றாா் ரகுபதி.