முகப்பு
புதுக்கோட்டை

இளஞ்சாவூரில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூா் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 8:52 PM
திருமயம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய மாட்டு வண்டிகள்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூா் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 66 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை கே. புதுப்பட்டி அம்பாள், 2ஆம் பரிசை மதுரை அவனியாபுரம் மோகன், 3ஆம் பரிசை பொன்பேத்தி மருதுபாண்டியா், 4ஆம் பரிசை திருப்புனவாசல் சரவணா ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. தொடா்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 47 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

இதில் பந்தய தொலைவு போய்- வர 6 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் முதல் பரிசை கலியநகரி சத்யா, சுண்ணாம்பிருப்பு கண்ணன், 2ஆம் பரிசை சாத்தியகுடி சாமியாடி, ராவுத்தம்பட்டி, 3ஆம் பரிசை அவனியாபுரம் மோகன், பழையூா் மீனாட்சி, 4ஆம் பரிசை கலியநகரி மனுநீதி சோழன், வேப்பம்பட்டி விக்னேஷ் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

இறுதியாக வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கு ரொக்க பரிசு, வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற திருமயம் - ராயவரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று போட்டியை கண்டு ரசித்தனா். திருமயம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.