ஒலி மாசு குறித்து காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்யலாம் என்றார் தஞ்சாவூர் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒலி மாசு தொடர்பாக ஒலிபெருக்கி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தஞ்சாவூர் மாநகரில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு இடையூறாக ஒலிபெருக்கிகளில் ஒலி அளவை வைக்கக் கூடாது.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கும், வயதானவர்கள், குழந்தைகள் ஓய்வு எடுப்பதற்கும், நோயாளிகள் நிம்மதியாக இருப்பதற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவோர் ஒலி அளவை குறைத்து வைக்க வேண்டும்.
ஒலி மாசு கட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்களுக்குப் புகார் ஏதும் இருந்தால் நகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி எண் 100-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் செய்பவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்றார் கண்ணன்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் இளமதி, காவல் ஆய்வாளர்கள் ராசேந்திரன், மோகன்தாஸ், சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.