காப்பீட்டு கழக ஊழியர் சங்க கும்பகோணம் கிளை முன்னாள் கோட்டச் சங்க துணைத் தலைவர் ஆர்.கே.என்று அழைக்கப்படும் ஆர்.கருப்பையன் நினைவுதின சிறப்பு கருத்தரங்கம் கும்பகோணம் ஜனரஞ்சனி மகாலில் தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கருத்தரங்கின் நிகழ்ச்சிக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கும்பகோணம் கிளை செயலாளர் எச்.கண்ணன் வரவேற்றார். பங்கு விலக்கலும் பொது இன்சூரன்ஸ் துறையும் என்ற தலைப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் சிறப்புரை ஆற்றினார். சமூக போராளி ஆர்.கே. என்ற தலைப்பில் தஞ்சை கோட்ட தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி கருத்துரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் தஞ்சை கோட்ட இணை செயலாளர் ஏ.சேகர் நன்றிகூறினார். இந்நிகழ்ச்சியில் திரளான காப்பீட்டு ஊழியர்கள், முகவர்கள் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.