மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து என்றார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்.
பேராவூரணி காந்தி பூங்கா அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு ஆதரவாக வாக்கு கோரும் பிரசார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் மேலும் பேசியது:
இந்த தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பது முக்கியம். எக்காரணம் கொண்டும் மோடி மீண்டும் வந்து விடக்கூடாது.
உங்களின் ஒவ்வொரு வாக்கும், உங்கள் பணத்தை நீங்கள் வங்கியில் இருந்து எடுக்க வரிசையில் நிற்க வைத்து அலைக்கழித்தவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும். பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி, கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது வராத, மோடி மீண்டும் வர வேண்டுமா?.
தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாத, ஜனநாயகத்திற்கு, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மோடி அரசு மீண்டும் வர வேண்டுமா?
என்பதை சிந்தித்து பார்த்து, தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.