வெவ்வேறு சாலை விபத்துகளில் இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 33.35 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கும், போக்குவரத்துக் கழகத்துக்கும் தஞ்சாவூர் தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள ராயமுண்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஆர். செந்தில் (21). கட்டடத் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் 2017, ஜூலை 16-ம் தேதி மனையேறிப்பட்டி பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், அதில், மோதி இறந்தார்.
ஹஇதுதொடர்பாக தஞ்சாவூர் விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் செந்தில் குடும்பத்துக்கு ரூ. 11.64 லட்சம் வழங்குமாறு திருச்சி சோழ மண்டல பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி கே. பூர்ண ஜெய ஆனந்த் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதேபோல, பாபநாசத்தைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி வாசுகி (45). இவர் 2017, ஆக. 28-ம் தேதி அப்பகுதியில் பேருந்து மோதியதில் இறந்தார்.
இதுதொடர்பாக அத்தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வாசுகி குடும்பத்துக்கு ரூ. 10,07,597 வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணத்துக்கு நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். மேலும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள தீரந்தன்குடியைச் சேர்ந்தவர் கருணாநிதி மகன் மணிகண்டன் (21). இவர் 2015, டிச. 12-ம் தேதி செல்லூர் - தீரந்தன்குடி சாலையில் டிராக்டர் மோதி இறந்தார். இதுதொடர்பக அத்தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ரூ. 11.64 லட்சம் வழங்குமாறு திருவாரூர் ஸ்ரீராம் பொதுக் காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.