பட்டுக்கோ ட் டை அருகே தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன், அண்ணி கைது செய்யப்பட்டனர்.
பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய நகர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்தியாகு மகன்கள் அருளானந்தம் (42), ஆரோக்கியசாமி (40). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இருவருக்கும் இடையே வீட்டு மனைகளை பாகம் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு வாசலில் நின்ற ஆரோக்கியசாமியை அந்த வழியாகச் சென்ற அவர் அண்ணன் அருளானந்தம், அவரது மனைவி விக்டோரியா மேரி (35) ஆகியோர் ஜாடையாக ஆபாச வார்த்தைகளால் திட்டிப் பேசினராம். இதை ஆரோக்கியசாமி தட்டிக் கேட்டாராம். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அருளானந்தம், விக்டோரியா மேரி ஆகிய இருவரும் அங்கிருந்த கட்டையை எடுத்து வந்து ஆரோக்கியசாமி தலையில் சரமாரியாக தாக்கினார்களாம். இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கியசாமி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் கொலைவழக்குப் பதிந்து அருளானந்தம், அவர் மனைவி விக்டோரியா மேரி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.