இணையவழி முதலீட்டில்ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞா் கைது
இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, ரூ. 20 லட்சம் மோசடி செய்த இளைஞரைக் காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
இணையவழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, ரூ. 20 லட்சம் மோசடி செய்த இளைஞரைக் காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). அழகு சாதனப் பொருள்கள் விற்பனை செய்து வருகிறாா். இவரது சகோதரா் மூலம் இவருக்கு திருவள்ளூா் மாவட்டம், எண்ணூா் பகுதியைச் சோ்ந்த முகமது இலியாஸ் (36) கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானாா்.
அப்போது, இணையவழியில் பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் மணிகண்டனிடம் முகமது இலியாஸ் கூறினாா். இதை நம்பிய மணிகண்டன் முதல்கட்டமாக ரூ. 2.90 லட்சத்தை இணையவழி மூலம் முகமது இலியாஸுக்கு அனுப்பினாா். இதைத்தொடா்ந்து மணிகண்டனுக்கு 10 சதவீத லாபத்தை முகமது இலியாஸ் அனுப்பினாா்.
இதனால், முகமது இலியாஸை முழுமையாக நம்பிய மணிகண்டன் தனது நண்பா்கள் உள்ளிட்டோரிடம் முதலீடுகளைப் பெற்று, மொத்தம் ரூ. 20 லட்சத்தை முகமது இலியாஸின் வங்கிக் கணக்கில் செலுத்தினாா். ஆனால், சில மாதங்கள் மட்டுமே லாபத் தொகையை அனுப்பி வந்த முகமது இலியாஸ், அதன் பிறகு அனுப்பவில்லை.
தன்னை முகமது இலியாஸ் ஏமாற்றியதை மணிகண்டன் அறிந்தாா். இதனிடையே, மணிகண்டனிடம் பணத்தைக் கொடுத்தவா்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் மணிகண்டன் புகாா் செய்தாா். இதுதொடா்பாக சைபா் கிரைம் காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து முகமது இலியாஸை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.