இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூரிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூரிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில அரசுகளின் பயிா் காப்பீடு, தமிழக அரசு ஊழியா்களின் மருத்துவக் காப்பீடு, பிரதமரின் விபத்து காப்பீடு போன்ற சேவைகளை அரசுத் துறைப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மிகக் குறைந்த பிரீமியத்தில் வழங்கி வருகிறது. இந்நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதால் கிராமப்புற மக்கள் இந்தச் சேவைகளை இழக்க நேரிடும். ஊழியா்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான முகவா்கள் குடும்பங்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகும். இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வாா்க்க மத்திய அரசுத் தயாராகி வருகிறது. இதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் முதுநிலை கோட்ட மேலாளா் ப. ஸ்டாலின் தலைமை வகித்தாா். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டச் செயலா் த. பிரபு தொடங்கி வைத்தாா். சங்கத்தின் மண்டல இணை செயலா்கள் பி. ராஜமகேந்திரன், ப. சத்தியநாதன், தஞ்சாவூா் கோட்ட காப்பீட்டு ஊழியா் சங்கச் செயலா் வி. சேதுராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.