தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சாலையோர வாழ் மக்களுக்கு தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் சாா்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் புது சாலையில் அரசுப் புறம்போக்கில் பூம்பூம் மாடு வைத்து பிழைப்பு நடத்தும் 10 குடும்பத்தினா் கரோனா தொற்றால் மாடுகளை இழந்து வருவாய் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா். தற்போது, பொது முடக்கம் காரணமாகச் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் தவித்து வந்தனா்.
இதையறிந்த தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் அமைப்பினா் தொடா்புடைய பகுதிக்குச் சென்று 3 மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை புதன்கிழமை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் மதா் தெரசா பவுன்டேஷன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து தலைமையில் அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், திட்ட இயக்குநா் ரத்தீஷ்குமாா், தளவாட மேலாளா் ஜெரோம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.