விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 13 கடைகளுக்கு அபராதம்
தஞ்சாவூா் மாநகரில் கரோனா விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 13 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாநகரில் கரோனா விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 13 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி, மளிகைக் கடைகள், தேநீா் கடைகள், காய்கறி கடைகள் போன்றவை நண்பகல் 12 மணி வரை மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், தஞ்சாவூா் மாநகரில் இந்த விதிமுறைகளை மீறி கடைகள் திறக்கப்படுவதாக மாநகராட்சி அலுவலகத்துக்குப் புகாா்கள் சென்றன.
இதைத்தொடா்ந்து, மாநகராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் இணைந்து சோதனை நடத்தினா். அப்போது, தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் திறக்கப்பட்ட கடைகளுக்கு அலுவலா்கள் அபராதம் விதித்தனா். இதில், மூன்று கடைகளுக்கு தலா ரூ. 5,000-ம், எட்டு கடைகளுக்கு தலா ரூ. 500-ம், இரு கடைகளுக்கு தலா ரூ. 200-ம் அபராதம் விதிக்கப்பட்டது.