கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: கணவன், மனைவி பலி
கும்பகோணம் அருகே திங்கள்கிழமை காலை இருசக்கர மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
கும்பகோணம் அருகே திங்கள்கிழமை காலை இருசக்கர மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு (60). இவர், இவரது மனைவி மீனா (55), மருமகன் ரமேஷ் (36) ஆகிய மூவரும் கும்பகோணத்தில் உள்ள உணவகத்தில் சமையல் வேலை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.
கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் பகுதியில் சென்றபோது, இவர்களது இருசக்கர வாகனம் மீது கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மோதியது. இதில், சோமு, மீனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த ரமேஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.