முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நட்சத்திர தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு

தஞ்சாவூரில் அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்த நட்சத்திர தங்கும் விடுதிக்கு திங்கள்கிழமை காலை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலை சீல் வைக்கப்பட்ட நட்சத்திர தங்கும் விடுதி.
பகிர்:

தஞ்சாவூரில் அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்த நட்சத்திர தங்கும் விடுதிக்கு திங்கள்கிழமை காலை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு 1995-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது தஞ்சாவூரில் போதுமான அளவுக்கு நட்சத்திர தங்கும் விடுதிகள் இல்லை. இதனால், தனியார் நட்சத்திர தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு அரசுத் தரப்பில் சலுகைகள் வழங்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் 1994, ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே அரசு நிலத்தில் 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பி. செல்வராஜூக்கு நட்சத்திர தங்கும் விடுதிக் (டெம்பிள் டவர்) கட்ட ஒரு ஏக்கர் 6,169 சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்த நட்சத்திர தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. 

இதனிடையே அரசு அனுமதியின்றி ஒப்பந்தத்தை மீறி எம். வெங்கடாச்சலம் மற்றும் எம். குமாருக்கு செல்வராஜ் உள் வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருவது அலுவலர்களின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், முறையாக குத்தகை செலுத்தப்படாததால் ரூ.12 கோடி நிலுவை உள்ளது. இதுகுறித்து தங்கும் விடுதி நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டும் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை. 

இதனால், 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த இடத்தை ஒப்படைக்குமாறு வருவாய் துறை சார்பில் நீதிமன்றம் மூலம் 2019-ஆம் ஆண்டு  நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் நட்சத்திர தங்கும் விடுதி நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காததால், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் ஏராளமான காவல் துறையினரின் பாதுகாப்புடன் திங்கள்கிழமை காலை சீல் வைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →