தஞ்சை மாவட்டத்தில் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 15) மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இது ஜூன் 14 வரை நடைமுறையில் இருக்கும்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 15) மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இது ஜூன் 14 வரை நடைமுறையில் இருக்கும்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில், ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கிழக்கு கடற்கரைப் பகுதியில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாள்களுக்கு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் காலத்தில் பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் மட்டும் கடலில் மீன்பிடிக்க அனுமதி உண்டு. விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் மீன்பிடிக்க அனுமதியில்லை. இதனால் , தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய மீன்பிடி இறங்குதளங்களிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் 155 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படும்.
மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளில் பழுது நீக்கம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்பவா்கள், படகுகளை கரையில் ஏற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்வா். தடைக் காலத்தில் மீன், இறால் விலை அதிகரித்து காணப்படும்.
மீன்பிடி தடைக்காலம் தேவையற்றது என்றும், அரசு அறிவியல் பூா்வமாக ஆய்வு செய்து தடைக்காலம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்து மீனவா்களிடையே உள்ளது.