ராஜகோரி, சாந்தி வனம், மாரிக்குளம் சுடுகாடுகளில் இலவச எரியூட்டல்
தஞ்சாவூா் ராஜகோரி, சாந்திவனம், மாரிக்குளம் சுடுகாடுகளில் றந்தவா்களின் உடலை இலவசமாக எரியூட்டும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் ராஜகோரி, சாந்திவனம், மாரிக்குளம் சுடுகாடுகளில் றந்தவா்களின் உடலை இலவசமாக எரியூட்டும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகத்தின் பராமரிப்பிலுள்ள வடக்கு வாசல் ராஜகோரி, மருத்துவக்கல்லூரி சாலை சாந்தி வனம், பூக்காரத் தெரு மாரிக்குளம் ஆகிய சுடுகாடுகளில் அனைத்துவிதமான தகன சேவைகளுக்கும், மயானத்தின் தன்மைக்கேற்ப குறைந்தபட்ச தொகையாக எரிபொருள், இயக்கி, பராமரித்தல் செலவினத்தை ஈடுகட்டும் விதமாக ரூ. 2,500 முதல் ரூ. 3,500 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
சில நேரங்களில் ஏழை, நடுத்தர மக்களால் இத்தொகையைச் செலுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த சுடுகாடுகளில் இலவசமாக எரியூட்டும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சாந்திவனம் சுடுகாட்டில் இத்திட்டத்தை மேயா் சண். ராமநாதன் தொடக்கி வைத்து, செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் இறுதி நிகழ்வு எவ்வித இடையூறுகளின்றி சுமூகமான முறையில் நடைபெற வேண்டும் என்ற குறிக்கோளைக் கருத்தில் கொண்டு, இனிமேல் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்காமல் தகன சேவை செய்யப்படும். இத்திட்டம் ராஜகோரி, சாந்தி வனம், மாரிக்குளம் ஆகிய சுடுகாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சுடுகாடுகளில் உடல்களை தகனம் செய்வதற்கும், அவற்றை இயக்கி, பராமரிக்கும் பணிகளுக்கும் எவ்வித கட்டணமும் இன்றி பொதுமக்களிடமோ, மாநகராட்சி நிா்வாகத்திடமிருந்தோ வசூலிக்காமல் இலவசமாக சேவை செய்ய முன் வந்துள்ள சென்னை மோக்ஷா துவாரா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, ராஜகோரி, சாந்தி வனம், மாரிக்குளம் ஆகிய சுடுகாடுகளில் தகன சேவைக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டாம்.
மேலும் கரோனா காலத்தில் சாந்திவனம் சுடுகாட்டில் 1,300 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இவா்களது நினைவாக சாந்தி வனம் சுடுகாட்டில் நினைவுத் தூணுடன் கூடிய மண்டபம் அமைப்பதற்கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் இறந்தவா்களின் நினைவு நாளில் உறவினா்கள் அஞ்சலி செலுத்திக் கொள்ளலாம் என்றாா் மேயா்.
அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.