மானாமதுரை: வைகை அணையில் திறக்கப்பட்ட உபரி நீர் சனிக்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை வந்தடைந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனத்தைக் கடந்து மானாமதுரையை வந்தடைந்தது.
அதன்பின் சிவகங்கை மாவட்டத்தை ஒட்டியுள்ள பார்த்திபனூர் மதகு அணைக்கு சென்றடைந்த இந்த நீர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தனது பயணத்தை தொடர்ந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள வைகைப் பாசன கால்வாய்களிலும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
வைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் குடிநீர் திட்டக் கிணறுகள், பாசனக் கிணறுகளில் நீர் ஆதாரம் உயரும். மேலும் ஆடி மாதத்திலேயே பாசன கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து நீர் வருவது மகிழ்ச்சியாக இருப்பதக விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.