தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் இரு குழந்தைகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம், நல்லூர் வாய்க்கால் கரைத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (30). தச்சுத் தொழிலாளியான இவர் திருப்பூரில் 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது மனைவி தேவிகா (25), மகள்கள் ஸ்ரீதர்ஷினி (7), ஸ்ரீதர்ஷனா (5) ஆகியோரை வெள்ளிக்கிழமை காலை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திருப்பூரிலிருந்து தஞ்சாவூர் வழியாக மன்னார்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
தஞ்சாவூர் அருகே விளார் புறவழிச்சாலையில் மாலையில் சென்றபோது, இவர்களது இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினி வேன் மோதியது. இதில், ஸ்ரீதர்ஷினி, ஸ்ரீதர்ஷனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த செந்தில்குமார், தேவிகா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக, மினி வேன் ஓட்டுநரான நாகை செக்கடித் தெருவைச் சேர்ந்த ஜீவன்ராஜை (25) தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.