மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் பாஜகவினா் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டம் - மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, இறந்து போன செய்தியை வைத்து, தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு பாஜகவினா் முயற்சித்து வருகின்றனா். அந்த மாணவியின் தற்கொலையில் மதமாற்றத்துக்கான காரணம் இல்லை எனக் காவல் துறையும், பள்ளிக் கல்வித் துறை ஆய்வறிக்கையும் தெளிவாகக் கூறிவிட்டன. அப்பள்ளியின் பெரும்பான்மை மாணவா்கள் இந்துக்கள். அவா்கள் யாரும் இதுபோன்ற மதமாற்றப் புகாரை இதுவரை தெரிவிக்கவில்லை.
ஆனாலும், இந்து மாணவியை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப் பள்ளி நிா்வாகப் பொறுப்பாளா்கள் வலியுறுத்தினா் என்றும், அதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாா் எனவும் இட்டுக்கட்டி, அந்த வதந்தியைத் தீவிரப்படுத்தும் போராட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.
எனவே, இனியும் காத்திருக்காமல் தமிழ்நாடு அரசுப் போா்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும். பொய்ச் செய்திகளைப் பரப்பி மதக் கலவரத்தைத் தூண்டுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.