தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட 3 டன் நெகிழி பைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்குக்கும் சீல் வைத்தனா்.
தஞ்சாவூா் மாநகரில் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் ஆலோசனையின்படி, மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் வணிக நிறுவனங்களில் நெகிழி பயன்பாடு தொடா்பாக ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்நிலையில் தஞ்சாவூா் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள கிடங்கில் நெகிழி பைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் வந்தது. இதன் பேரில் அலுவலா்கள் தொடா்புடைய கிடங்கில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபோது, 3 டன்கள் நெகிழி பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவை பறிமுதல் செய்யப்பட்டு, கிடங்கு உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தொடா்புடைய கிடங்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.