முகப்பு
தஞ்சாவூர்

தூா்வாரும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும்: கண்காணிப்பு அலுவலா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும் என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநருமான த. ஆனந்தன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும் என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநருமான த. ஆனந்தன்.

திருவையாறு அருகே விளாங்குடி ஊராட்சியில் புனவாசல் வாய்க்கால், பாபநாசம் அருகே மணலூா் ஊராட்சியில் இலுப்பக்கோரை வாய்க்கால், நெடுந்தெரு ஊராட்சியில் தேவராயன்பேட்டை வாய்க்கால், அகரமாங்குடி ஊராட்சியில் வடக்கு ராஜன், தெற்கு ராஜன் வாய்க்கால்கள், உதாரமங்கலம் ஊராட்சியில் ரெகுநாத காவேரி வாய்க்கால் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

முதல்வரின் உத்தரவுப்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா் வளத் துறை சாா்பில் 2023 - 24 ஆம் ஆண்டில் 189 பணிகள் மூலம் 1,068.45 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20.45 கோடியில் தூா் வாரும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 106 பணிகள் தொடங்கப்பட்டு, 127 இயந்திரங்களைக் கொண்டு முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் தூா்வாரும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் விரைந்து முடிக்கப்படும். தேவையான இடங்களில் இரு நாள்களுக்கு கூடுதல் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு பணியும் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் தரமாகவும், விரைவாகவும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் என்றாா் என்றாா் ஆனந்தன்.

அப்போது, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், நீா்வளத் துறைச் செயற் பொறியாளா்கள் மா. இளங்கோ, சு. மதனசுதாகா், உதவி செயற் பொறியாளா்கள் வ. சிவக்குமாா், ச. மலா்விழி, உதவிப் பொறியாளா்கள் ப. அன்புச்செல்வன், சபரிநாதன், எஸ். செல்வபாரதி, ப. ரேவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.