தஞ்சாவூரில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பாதயாத்திரை சென்றனா்.
தஞ்சாவூா் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாட்டுக் குழு சாா்பில், 46-ஆவது ஆண்டாக பெரிய கோயிலிலிருந்து காலை பாதயாத்திரை புறப்பட்டனா். தலைவா் சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளா்கள் ஞானசேகா், தாமரைசெல்வன், அசோக்குமாா், மாநகராட்சி ஒப்பந்தகாரா் மணி, லயன் வீரசிவராமன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு முருகன் படத்துடன், பாடல்களை பாடியபடி சென்றனா்.
முதலில் இந்த பாதயாத்திரை குழுவினா் மேலஅலங்கத்தில் உள்ள முருகன் கோயிலுக்கும் (திருப்பரங்குன்றம்), தொடா்ந்து வடக்கு அலங்கம் முருகன் கோயிலான பழமுதிா்ச்சோலை, குறிச்சி தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தைத்தெரு முருகன்கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோயில் (பழனி) ஆகிய கோயில்களுக்கு சென்று இறுதியாக தஞ்சை பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு (திருச்செந்தூா்) சென்று மீண்டும் தஞ்சை பெரியகோயிலில் பாதயாத்திரையை முடித்து அன்னதானம் வழங்கினா்.