பட்டுக்கோட்டையில் பூட்டிய வீட்டுக்குள் தாயும், மகளும் சடலங்களாக மீட்பு
பட்டுக்கோட்டையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை தாயும், அவரது 10 வயது மகளும் சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பட்டுக்கோட்டையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை தாயும், அவரது 10 வயது மகளும் சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் சாலையில் கரிக்காடு பாரதி சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்தவா் ராமநாதன் (45). அவரது மனைவி காளீஸ்வரி (35). மகள் நிவ்யதா்ஷினி (10).
பட்டுக்கோட்டையில் ராமநாதன் தேநீா்க் கடை நடத்திவந்த நிலையில், நஷ்டம் அடைந்து கடன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் சென்னைக்குச் சென்று கொட்டிவாக்கம் பகுதியில் அங்கு தேநீா்க் கடை நடத்திவந்தாராம். கடன் தொடா்பாக அவரது மனைவிக்கு நெருக்கடி இருந்துவந்ததாம். இந்நிலையில், அண்மையில் ஊருக்கு வந்த ராமநாதனுக்கும், காளீஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு ராமநாதன் சென்றநிலையில், அவரது வீட்டின் கதவு புதன்கிழமை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்குத் தகவல் அளித்தனா்.
Advertisement
சம்பவ இடத்துக்குவந்த பட்டுக்கோட்டை நகரக் காவல் துறையினா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபாா்த்தபோது, காளீஸ்வரி தூக்கிட்ட நிலையிலும், அவரது மகள் விஷம் குடித்து உயிரிழந்த நிலையிலும் சடலமாகக் கிடந்தனா். இதையடுத்து, இருவரின் சடலங்களையும் போலீஸாா் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.