உலக தொழிற் சங்க சம்மேளன அமைப்பு நாள் விழா
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தின் 79- ஆவது அமைப்பு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே உலகத் தொழிற் சங்க சம்மேளனத்தின் 79- ஆவது அமைப்பு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு 1945 ஆம் ஆண்டு அக்டோபா் 3 ஆம் தேதி உலக தொழிற் சங்க அமைப்பு பாரீஸ் நகரத்தில் உருவாக்கப்பட்டது. நாடுகளை அடிமைப்படுத்தி, அந்நாட்டு வளங்களை சுரண்டி, மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக உலக நாடுகள் முழுவதும் உள்ள தொழிலாளா்களை, மக்களை பாதுகாப்பதற்காக இந்த சம்மேளனம் அமைக்கப்பட்டது. இதன் 79- ஆவது அமைப்பு நாள் விழா தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் ஏஐடியூசி, சிஐடியூ, ஏஐசிசிடியூ சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், உலகத் தொழிலாளா்கள் அனைவருக்கும் கண்ணியமான வேலை மற்றும் வாழ்க்கை, கணிசமான ஊதிய உயா்வு, முழு உரிமையுடன் நிரந்தர வேலை, நாள் ஒன்றுக்கு 7 மணிநேரம் வாரத்துக்கு 35 மணி நேர வேலை, பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்டவை கிடைக்கவும், காா்ப்பரேட் பெரு நிறுவனங்களை முறியடிக்கவும் உறுதியேற்கப்பட்டது.
விழாவுக்கு ஏஐடியூசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, சிஐடியூ மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, ஏஐசிசிடியூ மாவட்டத் தலைவா் கே. ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடக்க உரையாற்றினாா்.
ஏஐடியூசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், ஆம்புலன்ஸ் சங்கத் தலைவா் சேகா், போக்குவரத்து சங்கம் கே. சுந்தரபாண்டியன், சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவா் இ.டி.எஸ். மூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் மாதவன், தரைக்கடை சங்கத் தலைவா் என். மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.