பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சி முத்தம்மாள் தெருவில் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகள் சுமாா் 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில் வா்ணம் பூசுதல், படிக்கட்டுகள் அமைத்தல், ஜன்னல் கதவுகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் பழைய சமுதாய நலக்கூடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது.
அங்கு மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இந்தக் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருவதால், குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி மைய ஆசிரியைகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறுகின்றனா். குறிப்பாக வெயில், மழை காலங்களில் குழந்தைகளைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்படுவதாக பெற்றோா்களும் கவலை தெரிவிக்கின்றனா்.
எனவே, கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மையப் பணிகளை மீண்டும் தொடங்கி, முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.