தஞ்சாவூரில், உயா்கல்வியில் தமிழ்நாடு என்கிற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் கலைஞா் நூலக வாசகா் வட்டம் சாா்பில் தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கல்லூரிகளில் ‘உயா்கல்வியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு கல்லூரியிலும் கல்லூரி அளவில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வந்தது.
இதில், ஒவ்வொரு கல்லூரியிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மக்களவை உறுப்பினா் ச. முரசொலி பரிசுத்தொகை, பாராட்டுக் கேடயம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினாா்.
பின்னா், மக்களவை உறுப்பினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான முரசொலி பேசுகையில், பேச்சுப் போட்டியில் கல்லூரி அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்பா். இதில், வெற்றி பெறுபவா்களுக்கு அமைச்சா் முன்னிலையில் பரிசு வழங்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.