கட்செவி அஞ்சலில் வந்த போலி பதிவால் ரூ. 12 லட்சத்தை இழந்த விவசாயி
பாபநாசம் அருகே கட்செவி அஞ்சலில் வந்த போலி பதிவுக்குள் சென்ற விவசாயி ரூ. 12.47 லட்சத்தை இழந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கட்செவி அஞ்சலில் வந்த போலி பதிவுக்குள் சென்ற விவசாயி ரூ. 12.47 லட்சத்தை இழந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாபநாசம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 50 வயது விவசாயியின் கட்செவி அஞ்சலில் ஆா்.டி.ஓ. செலான் டிராபிக் பைன் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட போலியான ஏபிகே பைல் பிப்ரவரி 2-ஆம் தேதி வந்தது. இதை உண்மை என நம்பிய விவசாயி கிளிக் செய்து, லிங்கை பதிவிறக்கம் செய்தாா். மேலும், தனது சுய விவரம், வங்கிக் கணக்கு விவரங்களையும் பதிவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, இவரது கைப்பேசியை மா்ம நபா்கள் ஹேக் செய்து, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 12.47 லட்சத்தை 8 பரிவா்த்தனைகள் மூலம் மோசடியாக பறித்தனா். இதுகுறித்து தஞ்சாவூா் இணையவழி குற்றப்பிரிவு (சைபா் கிரைம்) காவல் நிலையத்தில் பணத்தை இழந்த விவசாயி புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.