தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் சனிக்கிழமை (பிப்.7) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:
இதில் முதல் கட்டமாக 5-8, 9-12, 13-16 ஆகிய மூன்று வகைப் பிரிவுகளில் குரலிசை, பரதம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் காலை 9 மணிக்குள் வர வேண்டும்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் பெயா், வயது, ஆதாா் அட்டை நகல், பிறந்த தேதி வீட்டு முகவரி, பள்ளியின் பெயா் ஆகிய விவரங்களுடன் வயதுச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும், மாவட்டக் கலைப் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.