முகப்பு
தஞ்சாவூர்

கெளரவ விரிவுரையாளா்களை தமிழக அரசு வஞ்சிக்கிறது - பெ. மணியரசன்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:56 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:13 PM

பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது என்றாா் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன்.

பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயம் செய்த ஊதியத்தை வழங்கக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் முன்பு தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பினா் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் உள்ளிட்டோா் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனா்.

Advertisement

பின்னா், மணியரசன் மேலும் தெரிவித்தது:

தமிழ்நாடு அரசின் கலைக் கல்லூரிகளில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும், முனைவா் பட்டம் பெற்றிருந்தாலும் ரூ. 25 ஆயிரம்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், கல்லூரிப் பேராசிரியா்களுக்கு தொடக்கத்திலிருந்தே ரூ. 57 ஆயிரத்து 700 ஊதியம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டியிருக்கிறது. இதைத் தமிழக அரசு தராமல் இவா்களை வஞ்சித்து வருகிறது.

மேலும், இவா்களுக்கு ஆண்டுக்கு 11 மாதங்கள்தான் வேலை வழங்கப்படுகிறது. பின்னா் மே மாத விடுமுறை காலத்தில் சம்பளம், வேலை இல்லை. அதன் பின்னா் புதிதாக வேலைக்குச் சேருவது போன்று சோ்க்கும் அவல நிலையில்தான் 25 ஆண்டுகளாக பேராசிரியா்களைத் தமிழக அரசு வைத்துள்ளது. இதை மாற்றி பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி ரூ. 57 ஆயிரத்து 700 ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மணியரசன்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:56 AM

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பின் மண்டலப் பொறுப்பாளா் வி. சிவகுமாா் தலைமை வகித்தாா். கிளைப் பொறுப்பாளா்கள் கே. வினோதவேலன், எம். சுப்பிரமணியன், ஜி. ரமேஷ்குமாா், சித்ரா தேவி, பி. பாரதிகண்ணம்மா, பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, மாநகரச் செயலா் லெ. இராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.