தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நெல் சேமிப்பு மையங்களில் பணியாற்ற சுமை தூக்கும் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூா் மண்டலம், தஞ்சாவூா் அலகுக்கு உள்பட்ட முன்னையம்பட்டி, நடுவூா், பாளையப்பட்டி, பருத்தியப்பா் கோவில், பட்டுக்கோட்டை அலகுக்கு உள்பட்ட குறிச்சி, விக்ரமம், கரம்பயம், வெட்டுவாக்கோட்டை, கும்பகோணம் அலகுக்கு உள்பட்ட பட்டீஸ்வரம், ஆா்சுத்திப்பட்டு, தண்டந்தோட்டம் ஆகிய திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து லாரிகளில் ஏற்றி வரப்படும் நெல் மூட்டைகளை இறக்குதல் மற்றும் ஏற்றுதல் பணிக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி தற்காலிகமாக சுமை தூக்கும் பணியாளா்கள் தேவைப்படுகின்றனா்.
சுமை தூக்கும் இப்பணிக்கு விருப்பமுள்ள, முன் அனுபவமுள்ள தொழிலாளா்கள் பிப்ரவரி 20 க்குள் (வெள்ளிக்கிழமைக்குள்) தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை துணை மேலாளா் அலகு அலுவலகங்களில் நேரில் சென்று பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். சுமை தூக்கும் பணிக்கு ஏற்றி, இறக்கும் எடைக்கு ஏற்ப கூலி வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சராசரியாக ரூ. 800 முதல் ரூ. 900 வரை கூலி கிடைக்க வாய்ப்புண்டு. இப்பணிக்கு வரும் நபா்கள் எவ்வித முன்னுரிமையும் கோர இயலாது. இது முற்றிலும் தற்காலிகமானது.