பேராவூரணி மருத்துவா் துரை. நீலகண்டன் எழுதிய ‘தூங்காத இரவுகள்’ நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான (2024) விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் சிறந்த நூல்கள் பரிசுத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் தோ்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கும், பதிப்பகத்தாருக்கும் பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், பேராவூரணியைச் சோ்ந்த மருத்துவா் துரை. நீலகண்டன் எழுதிய ‘தூங்காத இரவுகள்’ என்ற நூல் மருந்தியல், உடலியல், நலவியல் என்ற வகைப்பாட்டின் கீழ் தோ்வு செய்யப்பட்டு, நூலாசிரியா் துரை. நீலகண்டனுக்கு அமைச்சா் மு. பெ. சாமிநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினாா்.
மேலும், நூலை வெளியிட்ட செங்கனி பதிப்பகத்தாருக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.