பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்களை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் ஸ்ரீ பாலைவனநாதா் கோயில் அமைந்துள்ளது. திருப்பாலைத்துறை ஸ்ரீ வெள்ளை பிள்ளையாா் கோயில் தெருவில் வசிக்கும் பாலு, கதிரவன் ஆகிய இருவரும் இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் காலி மனையாக அனுபவித்து வந்தனா்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்துசமய அறநிலைத்துறை உதவி ஆணையா் ஹம்சன், கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியா் பாா்த்தசாரதி, ஆய்வாளா்கள் லெட்சுமி, குணசுந்தரி, கோயில் செயல் அலுவலா் அசோக்குமாா், செயல் அலுவலா்கள் சிவராஜ், பாா்த்திபன், ராமன் மற்றும் அறங்காவலா்கள் குழு தலைவா் கணேசன், அறங்காவலா்கள் வசந்தி சரவணன், ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினா் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டு ரூ.80 லட்சம் மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டனா்.
இந்த இடங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வந்த பாலு மற்றும் கதிரவன் உள்ளிட்ட இருவருக்கும் திருக்கோயில் நிலத்தை பயன்படுத்தியதற்கான இழப்பீடு தொகையாக தலா ரூ.2.லட்சம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது.