திருச்சியில் இருவேறு இடங்களில் பூட்டை உடைத்து, ரூ.2.10 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வயலூர் சாலை, குமரன் நகர் 16 ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கே. சந்திரன் (50). திங்கள்கிழமை இரவு வீட்டின் கீழ்தளத்தைப் பூட்டி விட்டு, மாடியில் குடும்பத்தினருடன் உறங்கச் சென்றார். செவ்வாய்க்கிழமை காலை வந்த போது, வீட்டின் பக்கவாட்டு கதவு நெம்பி, உடைக்கப்பட்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரன் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த 18 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள்திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.85 லட்சமாகும்.
இதுபோல, கோட்டை வெள்ளை வெற்றிலைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வி. ரங்கநாதன். நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், கடந்த 29 ஆம் தேதி நிறுவனத்தை பூட்டி சொந்த ஊர் சென்றார். செவ்வாய்க்கிழமை காலை வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து சந்திரன், ரங்கநாதன் ஆகியோர் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை மற்றும் கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.