மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வியாழக்கிழமையன்று (ஏப்.18) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் வீ. கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்.18ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வணிகர்கள், வியாபாரிகள் தங்களது நிறுவனங்களில்பணியாற்றுவோரையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் ஜனநாயகக் கடமையாற்ற தவறாமல் வாக்களிக்கச் செய்ய வேண்டும். மேலும், அரசாணையின்படி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் அரசாணை பொருந்தும் என்பதால் தவறாமல் விடுமுறை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.