உலகிலேயே நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக சித்த மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்தார்.
திருச்சி நகைச்சுவை மன்றமும் சோழ மண்டலத் தமிழிலக்கிய கூட்டமைப்பும் இணைந்து நலம் நலமறிய என்ற தலைப்பில் மருத்துவ, வாழ்வியல் விழிப்புணர்வு கூட்டத்தை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா ஹாலில் நடத்தினர்.
இதில், கு.சிவராமன் பேசியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்.ஐ.வி. நோய் பூதாகரமாக பேசப்பட்டது. ஆனால், இப்போது அந்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் இனிவரும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீரிழிவு நோய் முதலிடம் வகிக்கிறது.
நீரிழிவு நோய் மரபு ரீதியாக வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது காற்று மாசுபடுவதாலும், ரசாயன ரீதியிலான உணவுப் பழக்க வழக்கங்களாலும், போதுமான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பதாலும் நீரிழிவு நோய் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.
இதேபோல், அம்மை நோயின் தாக்கம் உலக அளவில் 300 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த நோய் மூளையையும், விதைப் பையையும்,சினைப்பையையும் தாக்குகிறது. சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தானதாக அமைக்கிறது. இது போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றார். விழாவில், மூளை நரம்பியல் மருத்துவர் ஏ.வேணி, மனித உடலுக்கு போதுமான உடற்பயிற்சி, இயற்கை உணவு, போதுமான உறக்கம்,மன அழுத்தம் இல்லாத உள்ள அமைதி, உற்சாகமாக இருத்தல், முழு உடல் பரிசோதனை அவசியம் என்றார்.
நகைச்சுவை மன்றத்தின் 2 ஆவது நாள் நிகழ்வாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மன்ற புரவலர் எம்.பொன்னிளங்கோ தலைமை வகித்தார்.சாய் வித்யாலயா முதல்வர் அனுராதா சிவக்குமார், மன்ற செயலாளர் க.சிவகுருநாதன், எஸ்.ஆர்.ஜி.சீத்தாராமன், எஸ்.பி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரவலர் எஸ்.தியாகராஜன் நன்றி கூறினார்.