திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தேசம் காப்போம் மாநாடு ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது :
பொன்மலை ஜி - கார்னர் மைதானத்தில் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மாநாட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
கொடநாட்டில் விவகாரம் குறித்து வெளியான விடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி சயன், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் நீதிபதி, போலீஸாரின் நடவடிக்கையை விமர்சித்து, அவர்களை விடுவித்து விட்டார். காவலில் வைத்து விசாரிக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. முதல்வர் மீது நேரடியாக குற்றச்சாட்டு உள்ளதால், சிறப்புப் புலானய்வு குழு அமைக்க வேண்டும் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திமுக கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை. அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் மெகா கூட்டணி அமைக்கப் போவதாக கூறி வருகின்றன. பாஜகவோடு இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வைக்குமா என்பதுதான் இங்கு முக்கியக் கேள்வி. தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, மூன்றாவது அணி வெற்றி பெற்றதில்லை. திமுகவுக்கு எதிரணியாக அதிமுக தான் இருக்கும் என்றார் அவர்.