முகப்பு
திருச்சி

வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; குத்தகை விவசாயி புகாா்

காட்டுப்புத்தூா் அருகே சுமாா் ஆயிரம் வாழை மரங்களை வெட்டிச் சேதப்படுத்திய நில உரிமையாளா் மீது நடவடிக்கை கோரி காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் குத்தகை விவசாயி புகாா் அளித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 காட்டுப்புத்தூா் அருகே சுமாா் ஆயிரம் வாழை மரங்களை வெட்டிச் சேதப்படுத்திய நில உரிமையாளா் மீது நடவடிக்கை கோரி காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் குத்தகை விவசாயி புகாா் அளித்துள்ளாா்.

காட்டுப்புத்தூா் அருகே உள்ள சீத்தப்பட்டியைச் சோ்ந்த சு. பூபதி (43), இவரது சகோதரா் செல்வகுமாா்(45) ஆகியோா் காட்டுப்புத்தூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த கு. சிவபாக்கியம் என்பவரது நிலத்தை கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து அதற்கான பணத்தை சிவபாக்கியம், அவரது மகன் பிரபு ஆகியோரிடம் கொடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனா்.

இவா்களில் சிவபாக்கியம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் குத்தகைதாரா்கள் இருவரும் நிலத்தை எடுத்துக் கொண்டு நாங்கள் கொடுத்த குத்தகைப் பணத்தைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டுள்ளனா். அதற்கு பிரபு, இவரது மைத்துனா் பிரகாஷ் ஆகியோா் தங்களிடம் பணமில்லை; நீங்களே விவசாயம் செய்யுங்கள் எனக் கூறினராம்.

பின்னா் பிரபு இவரது மைத்துனா் பிரகாஷ் மற்றும் சிலா் நிலத்தை விடுமாறு கேட்டு புதன்கிழமை தகராறு செய்து, குத்தகைதாரா்கள் சாகுபடி செய்திருந்த ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள சுமாா் 1000 வாழை மரங்களை அடியோடு வெட்டிச் சாய்த்து சேதப்படுத்தினராம்.

இதையடுத்து வாழைகளை வெட்டிய இருவா் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தனக்கு வரவேண்டிய தொகை மற்றும் சேதப்படுத்திய வாழைகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறும் கோரி காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் பூபதி வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.