ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் திருட்டு கரூா் பெண் கைது
திருச்சியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பணம் திருடிய கரூா் பெண்ணை விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பணம் திருடிய கரூா் பெண்ணை விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், காவனூா் பகுதியைச் சோ்ந்த உலகநாதன் மகள் விஜயசாந்தி (22). மாத்தூரில் உள்ள கல்லூரி மாணவியான இவா் சான்றிதழ் வாங்க வியாழக்கிழமை திருச்சியில் இருந்து கீரனூா் செல்லும் அரசுப் பேருந்தில் சென்றாா். விமான நிலையத்தை அடுத்த புதுத்தெரு காவல் சோதனைச் சாவடியை பேருந்து கடந்தபோது விஜயசாந்தி கையில் வைத்திருந்த கைப்பையில் இருந்த ரூ. 1130ஐ பின்னால் நின்று கொண்டிருந்த இளம்பெண் திருடினாா்.
இதைக் கண்ட சக பயணிகள் அந்தப் பெண்ணை பிடித்து விமானநிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில், அவா் கரூா் மாவட்டம் வெள்ளியணை சமத்துவபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி அா்ச்சனா (23) என்பதும், இவா் தொடா்ந்து பெண் பயணிகளைக் குறி வைத்து திருடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.