ஈன்றதும் கன்றை விட்டுச்சென்ற காட்டுமாடு: காப்பாற்றிய வனத்துறையினர்
மணப்பாறை அருகே பிறந்தவுடன் கன்றை காட்டெருமை கைவிட்டு சென்ற நிலையில் 16 மணி நேரம் வனத்துறையினர் காபந்து செய்து காப்பாற்றினர்.
மணப்பாறை அருகே பிறந்தவுடன் கன்றை காட்டெருமை கைவிட்டு சென்ற நிலையில் 16 மணி நேரம் வனத்துறையினர் காபந்து செய்து காப்பாற்றினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வனச்சரகத்திற்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் அண்மையில் இரைக்காக இரவு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சினையாக இருந்த காட்டெருமை ஒன்று அங்கிருந்த அரச மரம் ஒன்றின் அருகே பெண் கன்றை ஈன்றுள்ளது.
அப்போது காட்டெருமைகளை கண்ட அப்பகுதிகளில் இருந்த நாய்கள் குரைத்தவாறு இருந்துள்ளது. இதனால் ஈன்றெடுத்த கன்றை அங்கேயே விட்டுவிட்டு காட்டெருமை சென்றுள்ளது. பிறந்தவுடன் கன்றை காட்டெருமை கைவிட்டு சென்ற நிலையில், அக்கம்பக்கத்தினரால் தகவலறிந்து காலையில் நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி வனத்துறையினர் பச்சிளம் கன்றை 16 மணி நேரம் காபந்து செய்து, புட்டில் பால் கொடுத்து ஆசுவாசப்படுத்தி காப்பாற்றியுள்ளனர்.
இரவு வரை காத்திருந்த வனத்துறையினரும், அப்பகுதி பொதுமக்களுக்கும், தாய்மையால் கன்றை தேடி நிகழ்விடத்துக்கு வந்த தாய் காட்டெருமையை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். அதற்காவே காத்திருந்த அவர்கள் கன்றை தாயுடன் சேர்த்தனர். கன்றை கண்டதும் ஓடோடி வந்து தன்னுடன் அணைத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றது தாய்மை மாறாத அந்த காட்டெருமை. காட்டெருமைக்குள்ளும் இருக்கும் தாய்மையின் பாசப்போரட்டம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.