துறையூர் அருகே கோயிலில் திருடிய இளைஞர் கைது: வெள்ளி பொருள்கள் மீட்பு
துறையூர் அருகே பெருமாள் கோயிலில் திருடிய இளைஞரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து திருடு போன இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை மீட்டனர்.
துறையூர்: துறையூர் அருகே பெருமாள் கோயிலில் திருடிய இளைஞரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து திருடு போன இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை மீட்டனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் எரகுடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் துறையூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் வகையறா கோயில்களுள் ஒன்றாகும். இக்கோயில் பட்டாச்சாரியார் சேதுமாதவன் பிப். 2ம் தேதி காலை நடை திறக்க சென்ற போது சாமிக்கு சாற்றுகிற வெள்ளிப் பொருள்கள் தங்கத் தாலி திருடு போயிருப்பதை அறிந்து கோயில் நிர்வாகத்துக்கு தகவலளித்தார்.
செயல் அலுவலர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர்.
துறையூர் காவல் சரகத்துக்குள்பட்ட முருகூரில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளைஞரை பிடித்து அப்பகுதி மக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். முரணாக பேசிய இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் எரகுடியைச் சேர்ந்த ப.மதன்(24) என்பதும், கோயிலில் திருடியவர் அவர்தான் என்பதும் தெரிந்தது.
உடனே அவரைக் கைது செய்த போலீஸார் அவர் வசமிருந்து இரண்டரை கிலோ எடையிலான வெள்ளிப் பொருள்கள், அரைப் பவுன் எடையிலான பெருமாள் படம் பொறித்த தாலி ஆகியவற்றை மீட்டனர்.